எங்களூர் வரலாறு - #அறிவோம்வரலாறு

    இந்த ஊர். சிற்றூரில்லை. அந்த பகுதியில் உள்ள முக்கியமான டவுன். பசும்பொன் மாவட்டத்துலருந்து, பின்ன ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாறி, இப்போ சிவகங்கை மாவட்டத்துல இருக்கு. இந்த ஊருக்கு நெருக்கமான பெருநகரம் 'சிட்னி'.


    இவ்வூரின் முதல் வரலாறு கி.மு 3ஆம் நூற்றாண்டில் பதியப்படுகிறது. அதாவது, சமணமும் புத்தமும் தமிழகத்தில் வெகுவாக பரவியிருந்த காலம். இதற்கு ஆதாரமாக கூறப்படுபவை.
    
    1. சிவன் கோயில் வெளியில் அமர்ந்திருக்கும் அம்மணசாமி சிலை. அதாவது, மகாவீரர் சிலை. இன்றும்.
    
    2. தேரர் என்ற பதத்தோடு அழைக்கப்படும் நீர்நிலையின் பெயர். புத்தபிட்சுகளை தேரர் என்றழைக்கப்படும். அவர்கள் அங்கு வாழ்ந்ததின் காரணமாக அவ்வாறு அழைக்கப்படுகிறது.

    சந்திர குப்த மௌரியர், வைசாக முனிவரை சமணத்தை பரப்ப, சோழ பாண்டிய நாடுகளுக்கு அனுப்பிய அதே காலத்தில்தான், இவ்வூரிலும் சமணம் குடியேறியிருக்கக்கூடுமென்று நம்பப்படுகிறது.
    
    அதேபோல், அசோகர் தன் சகோதரர் மகிந்திரர் மூலம், தமிழ் சமூகத்தில் புத்தமதத்தை அறிமுகம் செய்த காலத்தில், இவ்வூரிலும் புத்தமதம் குடியேறியுள்ளது. அசோகர் சந்திரகுப்த மௌரியரின் பேரன் என்பது கூடுதல் செய்தி.

    ஆயினும், மகாவீரரின் சிலையைப்போல் புத்தரின் சிலை ஏதுமில்லை. தேரர் எனும் பெயர் தாங்கிய நீர்நிலை தவிர்த்து. அந்நீர்நிலை அருகில் புத்த விகாரம் இருந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

    கி.பி 7-ஆம் நூற்றாண்டு வரை இவ்வூர் மக்கள் களப்பிரர்கள் ஆட்சியில் சமணர்களாக, செழிப்போடு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் - நெசவு.

    களப்பிரர்கள் ஆட்சிக்குப்பின் வந்த மன்னர்களால் சைவ மதம் தழுவப்பட்டு, குடிகளும் அவ்வாறே சைவ மதத்திற்கு மாறினர், மாற்றப்பட்டனர். அதன் காரணமாக, பல படுகொலைகள் அரங்கேறியது. சமணப்பள்ளிகள் சிவன் கோயில்களாக மாற்றப்பட்டது.

    மேற்சொன்ன சிவன் கோவிலும் அவ்வாறே சமணப்பள்ளியாக இருந்து, சிவன் கோயிலாக மாற்றப்பட்டதுதான். மாற்றியவர் சம்பந்தர். காலம் - 7 ஆம் நூற்றாண்டு.

    சென்ற முறை ஊருக்கு போனப்போ, இதை போன்று சில இடங்களில் பார்த்தேன். இது அந்த சிவன் கோயிலுக்கு எதிரிலிருந்தது.



    கி.பி 12/13 ஆம் நூற்றாண்டில் சேக்கிழாரால் தொகுக்கப்பட்ட/எழுதப்பட்ட பெரிய புராணம்/நாயனார் புராணம் என்ற புத்தகத்திலும் இவ்வூர் பற்றிய குறிப்புண்டு.

   சைவ சமயத்தை சார்ந்த 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மார் இவ்வூரில் எழுந்தருளியுள்ளதாக பெரிய புராணம்/நாயன்மார் புராணம் கூறுகிறது.

   ஆயினும் இதை சில வரலாற்று ஆசிரியர்கள் மறுத்துள்ளனர்.

காரணம்:

    1 - அப்பெயர் கொண்ட சிவனடியார் இவ்வூரில் வாழந்ததாக, சேக்கிழாரின் பெரியபுராணம் தவிர்த்து வேறெந்த சைவ புராணத்திலும் இல்லை.

    2 - சேக்கிழார் பாடிய நாயன்மார்கள் புராணம் பெரும்பாலும் செவிவழி செய்திகளே. அவரின் வாழ்நாளின் முந்தைய காலத்தில் வாழ்ந்ததாக "சொல்லப்பட்ட" சிவனடியார்களைப்பற்றி பாடியவை.

    மேலும், இந்த நாயன்மாரின் கதை, இவ்வூரில் வசித்த சமணர்களை சைவ மதத்திற்கு மடைமாற்று செய்ய உருவாக்கப்பட்ட புராணம் என்றே குறிப்பிடுகின்றனர்.

    14-ஆம் நூற்றாண்டில் தென்தமிழகத்தில் கடும் பஞ்சம். அதன் காரணமாக சில ஊர் மக்கள், தங்கள் ஊர் துறந்து வேறு ஊர்களுக்கு குடியேறினர். சான்றாக: சீவலப்பேரி, உடன்குடி, உளக்குடி, சுந்தரபாண்டிபட்டினம், தென்மலை, கடையநல்லூர், தஞ்சாவூர்.

    மேற்சொன்ன ஊர்களைச் சார்ந்த சுமார் 40 குடும்பங்கள் இவ்வூரின் தென்மேற்கு பகுதியில், அங்கு ஏற்கனவே வசித்த பள்ளர்களின் உதவியோடு குடியேறுகின்றனர். இந்த பகுதியில் இனிமையான குடிநீர் கிடைத்ததே காரணமென கூறப்படுகிறது. (இப்போ 600 அடி போர் போட்டாலும் தண்ணியில்லைங்கிறது மேலதிக தகவல்).

    இவ்வாறாக உள்ளது எங்கள் ஊரின் வரலாறு 15ஆம் நூற்றாண்டு வரை. இவ்வாறாக பலரால் அறியப்படாத, சிலரால் மட்டுமே அறியப்பட்ட ஊர் வரலாறுகள் பல உண்டு.

    தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் வெகுவாக பேசப்படாத வரலாறு. அறியப்படாத வரலாறு. அத அடிப்படையா வச்சு நீள் நாவல்களே எழுதலாம். அவைகளை தேடி அறியுங்கள். பல சுவையார்வ, மெய்சிலிற்கும் உண்மைகள் புலப்படும்.

    இவர் சொல்வதுபோல், ஒவ்வொரு தெரு பெயருக்கு பின்னும் பெரும் வரலாறு உண்டு. திராவிடம், தமிழ் தேசியம் பற்றி எதுவுமே தெரியவில்லையானாலும், இக்காணொளி புரியவைக்கும். தவறாது காணவேண்டிய முக்கிய காணொளி இது. Must watch to get glimpse of century old Tamil history.


P.S - சிலபல காரணங்களுக்காக ஊர் பெயர் சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன்.
Read my other posts here - Index

Comments

Popular posts from this blog

தமிழ் ஹைக்கூ கவிதைகள் | Haiku Poems in Tamil

உளவியல் சுரண்டல் - Psychological Exploitation in Politics, Advertising and Marketing

#ArignarAnnaSeries #E02 - Call My State 'Tamil Nadu'